என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 1 January 2014

உலகின் அதிகாரி

 பகவான் ஆன்மீக அறிவுரைகள்ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.
* 'சாந்தம்' என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.
* சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.
அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும். அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும். இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான். மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது. மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது. அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும். மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும். நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும். உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.
சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது; * ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம். சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.

தாழ்ந்து நடப்பதால் கேடில்லை

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே!
வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும். உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம். 'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும். முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை

No comments:

Post a Comment