என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 30 November 2011

ஸ்ரீ ரமண மகிரிஷி....

நரசிம்ம சாஸ்திரி என்கிற ஆந்திர தேசத்து அந்தணர், காசி யாத்திரை செல்லும்போது, காசியில் உள்ள ஒரு விநாயகரை மனம் ஒருமித்து வணங்கினார். அப்போது, அந்த விநாயகரிடமிருந்து குழந்தை போன்ற உருவம் ஒன்று நடந்து வந்து, அவருக்குள் புகுந்துகொண்டது. விசாகப் பட்டினத்துக்கு அருகில் உள்ள தன் ஊருக்கு வரும் வரைக்கும், நரசிம்ம சாஸ்திரி அந்த கணபதி உருவத்தையே மனதில் நினைத்துக்கொண்டிருந்தார். அந்த வருடம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, காசியில் தரிசித்த விநாயகரின் நினைவாக 'கணபதி’ என்று பெயரிட்டார்.
மூன்று வயது வரை, கணபதிக்கு அழ மட்டும்தான் தெரியும்; பேசத் தெரியாது. உடம்பில் ஏகப்பட்ட உபாதைகள். குழந்தை நோயாளியாக, எப்போதும் அழுது கொண்டிருக்கும் குழந்தையாகவே இருந்தது. பலவித நோய்களும் குழந்தையைத் தாக்குகிறதே, என்ன செய்வது என்று யோசித்து, அந்தக் கால வைத்திய முறைப்படி உடம்பிலே ஒரு இடத்தில் சூடு போட்டனர். அதற்குப் பிறகு, கணபதி மெள்ள மெள்ள உடல்நலம் தேறினான். மிக கெட்டிக்கார குழந்தையாக இருந்தான். ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால், உடனே மனதில் தேக்கிவைத்துக்கொண்டான். படிப்பில் மிக சூட்டிகையாக இருந்தான். விரைவில் மனனம் செய்கிற யோக்கியதையைப் பெற்றான். பதினாறு வயதுக்குள் வடமொழியிலும் தெலுங்கிலும் மிகச் சிறந்த பண்டித னாக மாறினான். 18 வயதில் திருமணம் நடந்தது.
வடமொழியில் வித்தகரானதால் புராண- இதிகாசங் களும், அதில் வரும் தபஸ்விகளின் வாழ்க்கையும் அவர் மனத்தை அசைத்தன. வேத விஷயங்களை ஆழ்ந்து படித்தபோது, ஜபதபங்களே வாழ்க்கையை உன்னத நிலைக்கு அழைத்துப் போகின்றன எனும் நம்பிக்கை ஏற்பட்டது. உடம்பைத் தூய்மையாக்கி, மூச்சை சீராக்கி, அசையாமல் உள்ளுக்குள்ளே ஆழ அமர்ந்து, ஜபம் செய்வது கடவுள் தரிசனத்தைக் கொடுக்கும் என்று தெளிவாக நம்பினார். பஞ்சாட்சர ஜபம் செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதியும் பார்த்தார். பிறகு, வேலூரில் பள்ளி ஒன்றில், வடமொழி ஆசிரியராகச் சேர்ந்தார். நல்ல மாணவர்களைத் தயார் செய்து, பாரதத்தின் சக்தியைப் பெருக்க வேண்டும், உலகில் ஆன்ம விழிப்பு ஏற்பட வேண்டும் என விரும்பினார்.

மூன்று வருடங்கள் ஆசிரியராக இருந்த பிறகு, அதுவும் அலுத்துப் போய், திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். நிருதி லிங்கத்துக்கு அருகே அமர்ந்து, அண்ணாமலையாரைப் பற்றி பாடல்கள் எழுதியும், இடைவிடாது மந்திர ஜபம் செய்தும் கடவுளை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் படித்த விஷயங்கள் எதுவும் அவரை அமைதிப்படுத்தவில்லை. கடவுள் தரிசனத்தை கொடுக்கவில்லை. கடவுளை அடைய முடியும் என்கிற நம்பிக்கை மெள்ளத் தளர்ந்தது. பலகோடி ஜபம் செய்தும், மனம் ஒருமைப்படவில்லையே என்ற கவலை எழுந்தது. இன்று இல்லை, நாளை தெரிந்துவிடும், நாளையில்லை இன்னும் சில நாட்களில் புரிந்துவிடும் என்று காலம் நகர்ந்துகொண்டிருந்ததே தவிர, துருவனுக்குக் கிடைத்த இறைத் தரிசனம், அனுமனுக்கு கிடைத்த அனுபவம், வேடுவப் பெண்ணான சபரிக்குக் கிடைத்த மோட்சம் தனக்கு கிடைக்கவில்லையே என ஏங்கினார்.

படிப்பு கொடுத்த மேதைமை, குழப்பத்தைத்தான் கொடுத்தது. கடவுள் என்ற விஷயம், முயற்சியால் அடைவது அன்று என்று புரியவே வெகு நாளாயிற்று. எங்கு முயற்சி, முற்றிலும் நின்று போகிறதோ, எங்கு எந்த முயற்சியும் இல்லையோ, அங்கே அமைதி பரிபூரணமாகக் குடியேறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவே நாளாயிற்று. திருவண்ணாமலையில் கூடியிருந்த ஒரு திருவிழா நாளில், அவர் துண்டு உதறி எழுந்தார். மலையில் ஒரு பாலசுவாமி இருக்கிறாராமே, அவரைத் தரிசித்து வருவோம் என்று கிளம்பினார். அவரைக் கண்டால் மனம் அமைதியாகிறது என்று சொல்கிறார்களே, அதை அனுபவிப்போம் என்று மலையேறினார்.

வெள்ளை கௌபீனம் உடுத்தி, விருபாக்ஷி குகையில் அமைதியாக அமர்ந்திருந்த பால சுவாமியைப் பார்த்ததும், உள்ளே நெகிழ்ந்தார். 'இதுவே கணபதி. இதுவே விநாயகம். நான் கணபதியல்ல; கணபதி இங்கே உட்கார்ந்திருக்கிறது’ என்று புரிந்துகொண்டார். பிள்ளையாருக்குத் தலையில் குட்டிக் கொள்வதுபோல, 'சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸ்ர்வ விக்னோப சாந்தயே’ என்று தலையில் குட்டிக்கொண்டு, பாலசுவாமியை நமஸ்கரித்தார். விநாயகருக்குச் சொல்லுகின்ற இந்த ஸ்தோத்திரம், பாலசுவாமிக்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது. வெள்ளை உடை அணிந்தவரும், எல்லாம் அறிந்தவரும், பூப்போன்ற முகத்தை உடையவரும், நான்கு கைகளை உடையவரும், அதாவது மன, புத்தி, ஸித்தி, அகங்காரம் என்ற நான்கையும் உள்ளடக்கியவரும், புன்னகையான முகத்தைக் கொண்டவரும், தன்னை அண்டியவர்களின் வினையைத் தீர்த்து, நல்வழிக்குக் கொண்டு செல்பவருமான விநாயகரை வணங்குகிறேன் என்கிற அந்த வடமொழி ஸ்லோகம், கச்சிதமாக பாலசுவாமிக்குப் பொருந்தியது.

ஆனால், கணபதி சாஸ்திரி பாலசுவாமியிடம் எதுவும் கேட்கவில்லை; எதுவும் பேசவில்லை; வெறும் தரிசனத்துடன் திரும்பிவிட்டார். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், கடவுளை அடைந்துவிடலாம், தவம் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார்; திட்டமிட்டார்; செயலாக்கினார். படிப்பு, ஞானம் தராது என்பது படித்தவர்களுக்குத் தெரிவதில்லை. 'படிப்பதை மறந்துவிடு’ என்று பல ஞானியர்கள் சொல்வது உண்டு. வெறுமே நூலால் எந்தப் பயனும் இல்லை என்று தபஸ்விகள் பேசுவது உண்டு. அறிந்ததிலிருந்து விடுதலை என்று உத்தமர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு வெகு தாமதமாகிறது. படிக்கப் படிக்கச் சகலமும் தெரிந்துவிடும் என்று திடமாக நம்புகிறார்கள். படிப்பு என்பது உலக வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது. சுற்றுச்சூழலுக்காகவும், அதிகாரங்களுக்காகவும், மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதற்காக வும், வெற்றி என்கிற இலக்கு நோக்கி அழைத்துப் போவது. ஆனால், உலகாயத வெற்றிகள், பாராட்டுகள் நிறைவைக் கொடுப்பதே இல்லை.

வெற்றி பெற்றவர் யாரும் அமைதியாக வாழ்வதே இல்லை. வெற்றிக்கு அடுத்ததாக என்ன செய்வது, இன்னொரு வெற்றி என்றுதான் போக வேண்டியிருக்கிறது. பாராட்டு வாங்கிய பிறகு என்ன செய்வது, மேலும் பாராட்டுக்கள் வாங்க வேண்டும் என்று ஆவல்தான் எழுகிறது. உலகாயத வெற்றிகளாலோ, சொத்து பத்து சுகங்களாலோ, பாராட்டுக்களாலோ, அதிகார மேன்மையினாலோ ஒருபோதும் அமைதி கிடைப்பது இல்லை. அமைதி கிடைக்காதவரை, திருப்தி ஏற்படுவதில்லை.

எது மனிதருக்கு நிறைவு கொடுக்கிறது.... பணமா, பாராட்டா, தாம்பத்திய சுகமா, பிள்ளைப்பேறா, அதிகாரமா? இல்லை. இவை எதுவும் தருவதில்லை. அமைதி என்பது உள்ளே, நம்முடைய இயல்பாய் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இடைஞ்சலாக என்ன இருக்கிறது என்று யோசித்து அப்புறப்படுத்த வேண்டும். இன்றைய தேதிக்கு நாலு கோடி ரூபாய் இருந்தால் போதும், நான் நிம்மதியாகிவிடுவேன் என்று எவர் நினைத்தாலும், ஒருநாளும் நிம்மதியடைய முடியாது. பணம் இல்லை என்பது ஒரு துக்கம். பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவது ஒரு துக்கம். பணம் சம்பாதித்த பிறகு அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டுமே என்று ஒரு துக்கம். அதைச் செலவு செய்யும்போதும் துக்கம். எனவே, எல்லாக் காலத்திலும், எல்லா விதமாகவும் பணம், துக்கம்தான். உலக சுகங்கள், பணத்தால் வருகின்றன. ஆனால், உலக சுகங்களால் மன அமைதி வருவதில்லை.

சுகம் அனுபவித்தவரும் அனுபவிக்காதவரும், சுகம் எது என்று கேள்வி கேட்பவரும், அமைதியை நோக்கித் திரும்புகிறார்கள். தன் படிப்பு தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்து, கணபதி சாஸ்திரி வாழ்ந்தார். காவியங்கள் பலவற்றை மிக எளிதாகச் செய்ததால், அவருக்குக் 'காவிய கண்டர்’ என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது. ஆனாலும், உள்ளுக் குள்ளே மனம் அமைதி பெறவில்லை. தன்னால் இயலாது, தன் படிப்பால் முடியாது, தன் முயற்சி யில் இது நடக்காது என்பதைப் புரிந்து கொள்ளவே அவருக்குப் பல வருடங்கள் ஆயின.

திடீரென்று ஒரு நாள், அவர் தவத்தில் இருந்து எழுந்தார். மலை நோக்கி நடந்தார். 'என்னால் இயலவில்லை; என்னால் அடைய முடிய வில்லை’ என்று உள்ளுக்குள் கதறியபடியே பால சுவாமியின் கால்களில் விழுந்து, அந்தக் கால்களை இறுகப்பிடித்துக் கொண்டார்.

''படிப்பு அகங்காரத்தைதான் வளர்த்தது. என் படிப்பு அமைதியைத் தரவில்லை. கற்றவை, கர்வத்தை தான் கொடுத்தன. அவை ஒருபோதும் உள்ளே சாந்தமாகச் செய்யவில்லை. என்னை நான் அமைதியாக வைத்துக் கொள்ளாத வரையில், இறைவன் அங்கு வந்து எப்படிக் குடியேறுவார்? இறைத் தரிசனம் எனக்கு எப்படிக் கிடைக்கும்? நான் மந்திர ஜபத்தின் எண்ணிக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்; நான் இன்றைக்கு இத்தனை முடித்து விட்டேன் என்று கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவரோடு இந்தக் கர்வத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். என் கர்வம் என்னை நோக்கித்தான் இருக்கிறது. மந்திரஜபத்தின் எண்ணிக்கை, என்னை நோக்கித்தான் இருக்கிறது. இறைவனை நினைப்பதற்கு மந்திரஜப எண்ணிக்கையோ, என் செயலோ உதவவில்லை. எனவே, எந்த அமைதியும் எனக்குக் கிடைக்கவில்லை.

என்னுள் இருக்கிற இந்த கர்வங்கள் எல்லாம் தொலைந்து, நான் அமைதியாக உட்கார்ந்து, உள்ளுக்குள்ளே என்னை இனம் கண்டுகொள்ள வேண்டும். தயவுசெய்து, சத்குரு, ஞானச்செல்வரே! எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். உங்கள் கால்களை இறுகப் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் அமைதியை அடைந்து விட்டீர்கள் என்று உங்களின் ஒவ்வொரு அசைவும் சொல்கிறது. உங்கள் முகம் சொல்கிறது. உங்கள் பேச்சு சொல்கிறது. உங்கள் பார்வை சொல்கிறது. எனக்குள் அந்த அமைதியில்லை. அதனால் என் பார்வை, என் பேச்சு, என் அசைவு எதுவும் சரியாக இல்லை. அவை எனக்கே அருவருப்பாக இருக்கின்றன.

சத்குரு, நான் உங்களைச் சரணடைந்தேன்; உங்கள் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டேன்; நான் உங்கள் காலடியில் முற்றிலும் என்னை இழந்து உங்கள் வசமானேன்; நான் என்ற வஸ்து இங்கு இல்லை; சத்குரு, என்னை உங்கள் கால்களில் பொசுக்கி, அழித்து வெறுமே நிற்கிறேன். நான் எதுவும் இல்லை. நீங்கள் என்னுள் புகுந்து, எனக்குள் அமைதியை ஏற்படுத்துங்கள்'' என்று வாய்விட்டுக் கதறினார்.

அவர்கள் இரண்டு பேரும் சந்தித்த அந்த நேரம், விருபாக்ஷி குகையில் எவரும் இல்லை. மகத்தான ஒரு அமைதி மட்டுமே அங்கு நிலவியது. எழுந்து முகம் துடைத்துக்கொண்டு கணபதி சாஸ்திரி பாலசுவாமியையே பார்த்துக்கொண்டிருந்தார். பாலசுவாமியின் கருணைக் கண்கள், காவியம் கண்ட கணபதி சாஸ்திரியின் கண்களை கருணையோடு நோக்கின. 'என்னுள் இருப்பதே உன்னுள்ளும்’ என்று சொல்லாமல் சொல்லின. தன்னுள் இருக்கின்ற அந்தப் பரம்பொருளை, தன் கண்களின் வழியே, எதிரே இருக்கின்ற பரம்பொருளை நோக்கி, பாலசுவாமி செலுத்தினார்.

இது ஓர் அற்புதமான நயன தீட்சை. தான்தான் எங்கும் இருக்கிறோம் என்ற நினைப்பினுடைய விகசிப்பு. அந்தக் கண்கள் வழியே பொங்கி, கணபதி சாஸ்திரி கண்களைத் தாக்கி, அவருக்குள்ளே இருக்கிற அந்தப் பரம்பொருளைத் தொட்டு அசைத்தது. மனம் விரிந்தது. அமைதி குடியேறிற்று. இறைவன் எங்கிருக்கிறார்? எல்லா இடத்திலும் இருக்கிறார். என்னை, நான் மறைத்துக் கொண்டிருக்கின்றேன். என் கண்களை, நான் மூடிக்கொண்டிருக்கிறேன். என் கர்வம், என்னைப் பிணைத்துக் குப்புறப் போட்டிருக்கிறது. என் திமிர், என் கண்களை மறைத்துவிடுகிறது. நான் பார்க்க இயலாதவனாக, பேச இயலாதவனாக, உணர இயலாதவனாக வெறுமே பல்வேறு கலைகளில் கட்டுண்டு கிடக்கிறேன். அந்தக் கட்டுகளை அறுத்துவிட்டு நிமிர, எதிரே இறை இருப்பது தெரிகிறது.

இறைவன் பார்வை உன்னைத் தாக்குகிறது. எல்லா இடத்திலும் இருக்கிற இறைவன், உன்னை மிகுந்த கவனத்தோடு, பிரியத்தோடு அணைத்துக்கொள்கிறார். இறை என்பது உனக்கும் எனக்கும் நடுவில், எல்லோருக்கும் மத்தியில், எல்லோர் நெஞ்சிலும் உறைகின்ற ஒரு விஷயம். தெரிந்துகொள்ளத்தான் எவரும் முயற்சி செய்வது இல்லை. அப்படித் தெரிந்தவர், உன்னுள் இருக்கின்ற இறைவனை, அதோ அங்குதான் என்று சுட்டிக்காட்ட, உனக்குத் தெரிந்துவிடுகிறது. அவர் சுட்டிக் காட்டத் தயாராக இருக்கிறார். பார்க்க, உனக்கு ஒரு யோக்கியதை வேண்டும்; பார்க்க, உனக்கு ஒரு பணிவு வேண்டும்; ஒரு ஏக்கம் வேண்டும்; பார்ப்பதற்கு, உனக்கு உண்மையிலேயே ஒரு ஆசை வேண்டும்.
காவியம் கண்ட கணபதி சாஸ்திரிக்கு அந்த ஏக்கம், அந்த ஆசை வந்தது. என்ன காவியம் எழுதியிருந்தாலும், என்ன உயர்ந்திருந்தாலும், உள்ளுக்குள்ளே அமைதி ஒரு சத்குருவால் ஏற்பட வேண்டும் என்று அவர் காலடியைப் பற்றிக் கதறியபோது, உள்ளே அமைதி தோன்றியது. இது யார், எதிரே அமர்ந் திருப்பது யார் என்று மிகப் பெரிய வியப்போடு அவர் பார்க்கத் துவங்கினார். இதுவரை இல்லாத பார்வையாக அது இருந்தது. இது ரமணம். இது ரம்மித் திருப்பதால், ரமணம். இவர் சாதாரணர் அல்ல. இவர் ரமணர். ஸ்ரீரமணர். சாதாரண ஸ்ரீரமணர் அல்ல; இவர் பகவான்; கடவுளின் உருவம்; கடவுளின் அவதாரம்; தன்னுள்ளே கடவுளைக் கண்டு தானே கடவுளாக இருப்பவர். இவர் பகவான். இவர் மிகப் பெரிய தபஸ்வி.
பல ஜென்மங்களில் செய்த தபத்தின் பயனாக, இப்போது எளிதில் தனக்குள் இறைவனைத் தேக்கி வைத்திருப்பவர். இவர் ரிஷி. மகரிஷி. பகவான் ஸ்ரீரமணர் என்று அவரை காவிய கண்ட கணபதி சாஸ்திரி கொண்டாடினார். அவர் அன்று சொன்ன ஸ்ரீரமணர் என்ற வார்த்தை வேங்கடராமன் என்ற, திருச்சூழியில் இருந்து வந்த அந்த இளைஞனுக்கு மிகச் சரியான பட்டமாக அமைந்தது. அதன்பின் அவரை வெறுமே சாமி, ஐயா என அழைக்காமல், பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினார்கள்.
இமயமலை தன் சிரசில் குளிர் மேகத்தைச் சூட்டிக் கொண்டதுபோல, சத்தியம் தனக்கு ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. அவரைச் சுற்றியுள்ளவர்கள் பாக்கியவான்கள். அன்று சூட்டிய பெயரைத் திரும்பத் திரும்பக் கூப்பிடு பவர்கள் பாக்கியவான்கள்

No comments:

Post a Comment