என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 28 September 2011

அருணாசலம் தந்த கருணாசலம்!

“நான்” என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தகுதி படைத்தவர் யார்? நேற்று, இன்று, நாளை என அனவரதம் காலத்தைக் கடந்து, உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்து உலகம் அழிந்த பின்னும் இருக்கக்கூடிய ஒருவரே தன்னை “நான்” எனக் கூறிக்கொள்ள முடியும். இன்றிருப்பவர் நாளை இல்லை; இன்று “நான்” ஆக இருப்பவர் நாளை “அது” வாகிவிடும் நிலையில் பரமாத்மா ஒருவரே “நான்” என தன்னைக் கூறிக்கொள்ள முடியும்; தன்னை அந்தப் பரம்பொருளாகவே உணர்ந்த பிரஹ்மநிஷ்டர்களும் அந்தத் தகுதி பெறுகிறார்கள். பிரஹ்மஞானியான ஒரு குருவினால் “தத்-துவம்-அஸி” என்ற மஹாவாக்யத்தின் மூலம் பிரஹ்ம ஞானம் உணர்த்தப்பெற்று அனுபவத்தினால் பக்குவமடைந்து “ஸர்வம்-கலு-இதம்-பிரஹ்ம” என்னும் ஞானமடைந்த நிலையில் உலகிலுள்ள தான் காணும், யாவுமே அந்தப் பிரஹ்மஸ்வரூபம்தான் என உணர்ந்து, அதில் தானும் ஒரு துகளாக இருப்பதனால் “அஹம்-பிரஹ்மாஸ்மி” என்னும் நிலையில் ஒருவனால் தன்னை தைர்யமாக “நான்” எனக் கூறிக்கொள்ள முடியும். அவ்வாறு எவ்வுயிரிலும் பரம்பொருளைக் கண்டு, தன்னையும் பரம்பொருளாக உணர்ந்த பகவான் ஸ்ரீரமணர் கூட வெகு துர்லபமாகவே தன்னை “நான்” என குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறார். “இவன்” என்றோ “இந்தக் கட்டை” என்றோதான் தன்னை அவர் குறிப்பிடுவது வழக்கம். இந்த வெள்ளையுடுத்திய, சந்யாசம் ஏற்காமலேயே துறவிபோல் வாழ்ந்த மஹானைப் பற்றி சிறிது பார்ப்போம்.
பரம்பொருளைப் பற்றிய தேடலுடன் பாரதம் வந்த மேனாட்டு அறிஞர்கள் பலருண்டு. உள்ளத்தில் அலைமோதும் ஆன்மிக வினாக்களுக்கு விடை தேடி அவ்வாறு பாரத தேசமெங்கும் பல ஆன்மிகப் பெரியவர்களைக் கண்டும் உள்ளம் நிறையாதவர் திரு. பால்பிரண்டன். ஒரு பேரறிஞரான சென்னை வாழ் நண்பரின் உதவியுடன் காஞ்சிமாமுனிவரைக் கண்டு அவர் அறிவுரைப்படி திருவண்ணாமலையிலுள்ள பகவான் ரமணரை அணுகிய அவருடைய மனத்தில் அதுவரை அலைமோதிய எண்ணற்ற வினாக்கள் அம்மாமுனிவரைக் கண்டவுடனேயே மாயமாய் மறைந்தன. அவர் சந்நிதியில் அந்த அறிஞரின் மனத்தில் அதுவரை உணர்ந்தறியாததொரு நிம்மதி நிறைந்தது. தான் கேட்கத் தயாரித்து வந்த எந்த வினாவுக்கும் அவசியமில்லாது அவை யாவும் அர்த்தமற்றதாகிவிட்டன. ரமணரின் மௌனமே அவற்றுக்கு பதிலான நிலையில், “குரோஸ்து மௌனம் வ்யாக்யானம், ஸிஷ்யா: சின்ன ஸம்ஸயா:” என்னும் தக்ஷிணாமூர்த்தி தத்துவம் அங்கு உண்மையானது. ரமணரின் பேரொளி அவரில் நிறைந்து, அது முதல் அவரை அங்கே தங்கி அவர் வாய்மொழியாகவே பல ஆன்மிக விளக்கங்களைக் கேட்கும் பேறு பெறச் செய்தது. இவர் ஸ்ரீரமணரின் பேரருளில் நனைந்த அரும்பெரும் பக்தர்களில் ஒரு சிறு துளியே.
இவ்வாறு அருணையின் பேரொளியாய்த் திகழ்ந்த ஸ்ரீரமணர், சிறுவயதில் இவ்விதம் சிறக்கப் போகிறார் என்னும் அறிகுறி எதுவும் தெரியாது இருந்தவர் தான். மீனாக்ஷி அருளாட்சி புரியும் மதுரையம்பதிக்கு அருகில் திருச்சுழி என்னும் ஊரில் 1879ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசனத்தன்று, ஆசாரமிகு திரு.சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியின் பேரருட் புதல்வனாக, நான்கு மகவுகளில் இரண்டாவதவராக பிறந்த திரு. வெங்கடராமனென்னும் இயற்பெயர் கொண்டவர் இவர். படிப்பில் சுமாரானவராகவே இருந்த இவர் விளையாட்டில் மட்டும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இவர் இடம்பெறும் குழுவைத்தேடி வெற்றி வந்ததால் அனைவரும் அவரைத் “தங்கக் கை” என அழைத்தனர். தன் தகப்பனாரின் சகோதரர், திரு. சுப்பய்யரிடம் திண்டுக்கல்லிலும், மதுரையிலும் தங்கிக் கல்விகற்ற இவர், 1892இல் தன் தந்தையார் இறைவனடி சேர்ந்த பின் ஒரு நாள் காலை பள்ளிக்குச் செல்லும் வழியில் திரு. கிருஷ்ணபிக்ஷு என்னும் முதிய உறவினரைக் கண்டு அவர் எங்கிருந்து வருகிறார் என வினவ அவர், “அருணாசலத்திலிருந்து” எனக் கூறியதும் அந்தப் பெயர் தனக்கு மிகவும் பரிச்சயமானதாக இருப்பதாக உணர்ந்தார். அது எங்கிருக்கிறது என்றும் அவரிடமிருந்து தெரிந்து கொண்டார். இது நடந்து ஒரு மாதகாலத்தில் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தின் ஒரு பிரதி அவருக்குக் கிடைத்தது. அதன் வாயிலாக அறுபத்து மூன்று நாயன்மாரின் சரித்திரத்தை அறிந்த அவர் பக்தி மேலீட்டால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லலானார்.
இதைத் தொடர்ந்து 1896ஆம் ஆண்டு பதினாறு வயதினரான திரு. வெங்கடராமனின் வாழ்வில் ஒரு மகத்தான மாற்றம் நேர்ந்தது. அவருடைய ஆன்மா அவர் உடலினின்றும் வேறான நிலையில், உடலழிந்த பின்னும் “நான்” எனப்படும் ஆன்மா வாழ்கிறது என உணர்ந்தார். இதன் பின் ஒரு நாள் வீட்டின் முதல் மாடியறையில் தனியே இருந்த அவருக்குத் திடீரென மரணபயம் உண்டானது. உடல் ஆரோக்கியமாக இருந்த நிலையிலும் இந்த பயம் உண்டானபோது மரணத்தை அனுபவிக்கத் தொடங்கினார். உடலினின்றும் ஆன்மா வேறாவதையும், சிறிது நேரத்தில் நிலைமை பழையபடி ஆவதையும் உணர்ந்தார். இந்த அனுபவத்துக்குப் பிறகு மரணபயம் ஓடியொழிந்தது. இதன் பிறகு படிப்பிலோ, நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ அவருடைய நாட்டம் குறைந்தது. ஆன்மாவில் ஆழ்வதினும் அதிகமான நிலையில் மீனாட்சி கோவில் பிராகாரங்களில் தியானத்தில் அடிக்கடி ஆழ்ந்தார். சுமார் ஆறு வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் கணக்குப் பாடத்தில் மனம் செல்லாத அவர், பாதியிலேயே அதைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் நீண்ட நாளைய அவாவான அருணாசலத்தைத் தேடிக் கிளம்பிவிட்டார். அண்ணனிடம் தான் விசேஷ வகுப்புக்காகச் செல்வதாகக் கூறி, வழியில் தன் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த அவர் எடுத்துச் செல்லக்கூறிய ஐந்து ரூபாயில் தன் வழிச்செலவுக்காக மூன்று ரூபாய் மட்டுமே எடுத்துக் கொண்டு, மீதியை ஒரு சிறிய சீட்டில், “இது தன் தகப்பனின் ஆணைப்படி தகப்பனைக்காணச் செல்கிறது. வீணாகத் தேடி பணம் செலவழிக்க வேண்டாம்.” என எழுதி வைத்து விட்டு, ரயிலேறி விழுப்புரத்தை அடைந்து, தன்னிடம் இருந்த மீதி பணத்துக்கு மாம்பழப்பட்டு வரை ரயிலில் பயணம் செய்து மீதி 30 மைல் தூரத்துக்கு நடக்கலானார். வழியில் கீழூர் என்னுமிடத்தில் பசியினாலும், களைப்பினாலும் மயங்கி விழுந்த அவரை திரு.முத்துகிருஷ்ண பாகவதர் என்னும் ஒரு மகான் உணவும் தங்குமிடமும் தந்து ஆதரித்தார். அவரிடம் தன் காது கடுக்கன்களைத் தந்து பணம் பெற்று திருவண்ணாமலையை அடைந்தார். அங்கு அருணாசலேஸ்வரர் சந்நிதியில் எவருமே இல்லாத ஏகாந்தச் சூழலில், கர்ப்பகிருஹத்தில் நுழைந்து உவகை பொங்க லிங்கத்தை அணைத்து, “அப்பனே! நீங்கள் அழைத்தபடி நான் வந்துவிட்டேன்” எனக் கூறினார்.
முதல் சிலவாரங்கள் ஆயிரம் கால் மண்டபத்திலும், பிறகு பாதாள லிங்கத்தினருகிலும் ஆழ்ந்த சமாதியில் ஆழ்ந்தார். இங்குதான் மஹான் சேஷாத்ரி ஸ்வாமிகள் அவரைக் கண்டு இந்தப் பாலயோகியைக் காத்திடத் திருவுள்ளம் கொண்டார். அங்கு சுமார் ஆறு வாரங்கள் தங்கியபின் சுப்ரஹ்மண்யர் சந்நிதியில் உலகையும், உடலையும் மறந்த நிலையில் தங்கினார். பிறகு குருமூர்த்தத்துக்கு அருகே மாம்பழத்தோப்பில் அவர் தியானத்தில் ஆழ்ந்தபோது பழனிச்சாமி என்ற சாது அவரிடம் லயித்த மனத்தினராக, அவருடனேயே அவருடைய நிரந்தரப் பணியாளராகத் தங்கிவிட்டார். இந்தப் பாலயோகி குருமூர்த்தத்திலிருந்து 1899ஆம் ஆண்டு விரூபாக்ஷா குகைக்குச் சென்று 1916வரை தங்கியபோதும், அங்கிருந்து ஸ்கந்தாஸ்ரமத்திற்குச் சென்று அந்த குகையில் 1922 வரை தங்கிய போதும் இடைவிடாது ஸ்ரீரமணரை, அவர் தன்னிலை மறந்து தியானத்தில் ஆழ்ந்த நிலையில் காத்து, அவருக்காக பிச்சையெடுத்தாகிலும் சமைத்து உணவளித்து பாதுகாத்தவர் பழனிச்சாமியே யாவார்.
ஸ்ரீரமணரின் ஞான ஒளியானது, அவர் பெரும்பாலும் மௌனத்திலேயே ஆழ்ந்து, தனிமையில் தியானத்திலாழ்ந்த போதிலும், நாளடைவில் அவரைக் காண வரும் பக்தர்கள் பலரை ஈர்த்தது. இதற்குள் அவர் இருப்பிடத்தை அறிந்து கொண்ட அவருடைய தமையனார் திரு.நாகசாமி திரும்பி வரும்படி அவரை அழைக்க வந்து தன் முயற்சியில் தோற்றுத் திரும்பினார். அவருடன் வந்த தாயாரும் வருத்தத்துடன் திரும்ப நேரிட்டது. 1899இல் ஸ்ரீரமணர் ஸத்குரு குகையிலும், குரு நமச்சிவாய குகையிலும் சிறிது காலம் தங்கி பிறகு விரூபாக்ஷா குகையினை அடைந்து 17 ஆண்டுகள் அங்கு தங்கினார். 1902இல் திரு.சிவப்பிரகாசம் பிள்ளை என்னும் அரசாங்க அதிகாரி ஒருவர் ஸ்ரீரமணரிடம் ஆத்மஞானம் வேண்டி வந்தார். அவர் கேட்ட பதினான்கு கேள்விகளுக்கு இந்த இளம்யோகி அளித்த பதில்களே ஸ்ரீரமணர் ஆத்ம விசாரத்தில் முதன் முறையாகச் செய்த உபதேசம். அதுவே “நான் யார்?” என்னும் நூலாகப் பரிமளித்தது. ஸ்ரீரமணரின் பக்தர்களில் மிக முக்கியமானவர், திரு.காவ்யகண்ட கணபதி சாஸ்திரி என்னும் ஒரு வேதவித்து. 1907இல் ஸ்ரீரமணரைக் காணவந்த அவர், அவரிடம் உபதேசம் பெற்று அவரை ‘பகவான் ஸ்ரீரமண மஹரிஷி’ என அழைக்கலானார். இதுவே பிறகு அவருடைய பெயராக நிலைத்தது.
1911இல் ஸ்ரீரமணரைக் காணவந்த காவல் அதிகாரியான திரு.ப்ராங்க் ஹம்ப்ரிஸ் என்பவர்தான் மஹரிஷியின் மேனாட்டு பக்தர்களில் முதலாமவர். இவரைத் தொடர்ந்துதான் திரு.பால்பிரண்டன் 1931ஆம் ஆண்டு பகவானால் ஆட்கொள்ளப்பட்டார். இவரைத் தொடர்ந்து திரு.பரமஹம்ஸ யோகாநந்தர், திரு.ஸாமர் செட்மாம், திரு.மர்ஸடிஸ் டி அகோஸ்டா, திரு.ஜூலியன் பி.ஜான்சன், மற்றும் திரு.ஆர்தர் ஆஸ்போர்ன் முதலியவர்கள் பகவானின் திருவடி நிழலில் அருளடைந்தனர்.
உலகப்பற்றின்றியும், அஹங்காரமின்றியும், ஒரு துறவிபோல் வாழ்ந்த போதிலும் ஸ்ரீரமணர் முறைப்படி சந்யாசம் ஏற்றவரல்லர். அவர் விரூபாக்ஷா குகையில் வசிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் அவரிடம் வந்த பக்தரான ஒரு பிரபல மடத்தைச் சேர்ந்த சாஸ்திரிகளுக்கு இது குறையாகத் தெரிந்தது. அவர் பகவானிடம் தன் உள்ளத்திலிருப்பதைக் கூறி, தான் பிற்பகலில் மறுபடி வருவதாகவும் அதற்குள் பகவான் யோசித்து சம்மதித்தால் முறைப்படி அவருக்கு தீக்ஷையளித்து தங்கள் மடத்திலேயே ஓர் ஆசார்யராகச் செய்வதாகவும் கூறிச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே ஒரு முதியவர் ஸ்ரீரமணரிடம் வந்து அவர் முன் ஒரு புத்தக மூட்டையினை வைத்துவிட்டு, தான் ஸ்நானம் செய்துவிட்டு வருவதால் கூறிச் சென்றார். அவரது புத்தக மூட்டையை பகவான் பார்வையிட அதில் ‘அருணாசல மாஹாத்மியம்’ என்னும் நூலில் ஒரு பதிகத்தில் ‘அருணமலைக்கு மூன்று யோஜனை விஸ்தீரணத்தில் வசிப்பவருக்கு நான் ஸம்சாரபந்தங்களினின்றும் முக்தியளிக்கிறேன். என்னுள் அவர்கள் எந்த தீக்ஷையும் எடுத்துக் கொள்ளாவிடிலும் கலப்பர்’ எனக் குறிப்பிடப் பட்டிருப்பதைக் கண்டார். பிற்பகலில் வந்த சாஸ்திரிகளுக்கு அதுவே பதிலாக அமைந்தது.
ஒரு சுத்த ஞானிக்கு என்றுமே ஜாதி மத பேதங்கள் இருந்ததில்லை. அதிலும் ‘ஸர்வம்-கலு--இதம்-பிரஹ்ம’ என்னும் உன்னத நிலையில் எங்கும் எதிலும் பரம்பொருளைக் காணும் பிரஹ்ம ஞானியான ஸ்ரீரமணருக்கு எவரும், எதுவும் சமம்தான். ஸ்கந்தாஸ்ரமத்தில் பகவான் இருந்தபோது ஒரு மனிதன் தன் குடும்பத்துடன் ஆஸ்ரமத்தின் நுழைவு வாசலில் நின்று பகவானை அணுகி நாங்கள் வந்தனம் செய்துகொள்ள அனுமதி வேண்டும்” என்று கேட்டான். “எதற்கு அனுமதி கேட்கிறாய்?” என அவர் கேட்க “நாங்கள் தீண்டத் தகாதவர்கள்” என அவன் பதிலுறுத்தான். பகவான் தனக்கு எந்த ஜாதி-மத பேதமும் கிடையாது எனக்கூற, அவர்கள் ஆனந்தமாக அவரை அணுகி நமஸ்கரித்து பத்து நிமிடங்களுக்கு மேல் அவரது திவ்யகடாக்ஷத்தில் திளைத்தனர்.
கேரளத்து புரட்சிகுருவான ஸ்ரீநாராயணகுரு ஸ்ரீரமண மஹரிஷியை ஆவலுடன் வந்து தரிசித்து அவருடன் உணவருந்தினார். இருவரிடையேயும் மௌனம்தான் மொழியானது. ஆனால் பகவானிடம் மனம் லயித்தவராக தன் இருப்பிடத்துக்குத் திரும்பிய பிறகு ‘நிவ்ருத்தி பஞ்சகம்’ என்னும் நூலை ஸம்ஸ்கிருதத்தில் இயற்றி ஸ்ரீரமணருக்கு அவர் அனுப்பினார்.
1912ஆம் ஆண்டில் பக்தர்களிடையே பகவான் இருந்தபோது தான் இளம் வயதில் தனியே இருக்கும்போது அனுபவித்த மரண அனுபவத்தை நிர்விகல்ப ஸமாதி நிலையில் சுமார் 15நிமிடங்கள் அனுபவித்தார். 1916ஆம் ஆண்டில் தன் இளைய மகன் திரு.நாகசுந்தரத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்த பகவானின் தாயார் அழகம்மாள் ஒரு பக்தையாகவே அவருடன் வாழ்ந்து அவருக்குப் பணிவிடை செய்து 1922 ஆம் ஆண்டில் முக்தியடைந்தார். திரு.நாகசுந்தரம் சந்யாசியாகி சுவாமி நிரஞ்சனானந்தா என்னும் தீக்ஷாநாமத்துடன் ஆஸ்ரமவாசிகளுக்கு ‘சின்னசாமி’ ஆகிவிட்டார். ஸ்ரீரமணர் தன் தாயாருக்கு சமாதிகோவில் கட்டி காசியினின்று கொண்டுவரப்பட்டதொரு லிங்கத்தை அங்கு ஸ்தாபித்து மாத்ருபூதேஸ்வரர் ஆலயமாக அதை வழிபாட்டு ஸ்தலமாக ஆக்கினார். ஸ்கந்தாஸ்ரமத்திலிருந்து பகவான் சமாதி அமைத்த புதிதில் அடிக்கடி அங்கு செல்வது வழக்கமாயிற்று. இதைக் கூட ஒரு பந்தமாக அவர் கருதினாரோ என்னவோ ஒரு முறை அவ்வாறு வந்தவர் மலையடிவாரத்திலேயே தங்கிவிட்டார். அதுவே ரமணாஸ்ரமமாக வளர்ந்தது. அந்த ஆஸ்ரமத்தை நிர்மாணித்து விரிவுபடுத்தும் பணியை சின்னசாமி ஏற்றார். 1953இல் அவர் மறைந்த பிறகு மஹரிஷியின் சமாதியும் (1967). காற்றோட்டமான தியான மண்டபமும் (1970) கட்டப்பட்டன.
1926ஆம் ஆண்டில் தன் வழக்கமான கிரிபிரதக்ஷிணத்தையும், பின்வந்த வருடங்களில் சமையலறையில் தான் வேலை செய்வதையும் கூட நிறுத்திவிட்டு தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுடன் முழுநேரம் பகவான் இருக்கத் தொடங்கினார். பகவான் ஜாதி-மத பேதம் பாராத போதிலும் ஆசார சீலர்களான பல அந்தணர்கள் தனியே தடுப்புக்குப் பின்புறம் அமர்ந்து சாப்பிடுவது தவிர்க்க முடியாததாகியது. ஆகவே ஸ்ரீரமணர் சாப்பாட்டு அறையில் தடுப்புக்கு எதிரிலுள்ள ஆஸனத்திலேயே அமரத் தொடங்கினார். அவ்வாறு செய்கையில் ஆசாரசீலர்களான அந்தணர்களையும், அதே சமயம் இதரர்களையும் அவரால் சமமாக நோக்க முடிந்தது. எவரையும் புண்படுத்தாத மனம் கொண்ட அவர் எவருக்குமே நேராக உபதேசமும் செய்ததில்லை. ஓர் எளிய பக்தர் ஆஸ்ரம நுழைவாயிலில் வணங்கி உபதேசம் கோரியபோது “சிவசிவ” என்று சொல்லிக்கொண்டே இரு. அது உன்னைக் காப்பாற்றும்” எனக்கூறினார்.
எளிமையே உருவான ஸ்ரீரமணரைக் காணவந்த பூரி சங்கராசாரியார் அவருக்கு ஜரிகை வேலைப்பாடு மிகுந்த சால்வையினையும் ரூபாய் 116ஐயும் தந்தார். பணத்தை அவருக்கே திருப்பித் தந்துவிட்டு, அவர் வற்புறுத்தலுக்கிணங்கி சால்வையை மட்டும் ஏற்ற பகவான், பின்னர் அதன் ஜரிகைக் கரையினை அகற்றிவிட்டு ஓரத்தைத் தைக்கச் சொல்லி குளிர் காலங்களில் மட்டும் போர்த்துக் கொள்ள அதை உபயோகித்தார். இவருடைய உபதேசங்கள் அவர்களுக்கு வேதவாக்காயின. எந்தச் சமயமும் அதன் கோட்பாடுகளினால் பரவுவதில்லை.தன் நடத்தையினால் பிறருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டும் ஓர் உபதேசகனாலேயே ஒரு சமயம் மக்களால் நம்பிக்கையுடன் ஏற்கப்படுகிறது.
1935ஆம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்து பகவானைத் தரிசித்த மேஜர் சாட்விக் என்பவர் “நான்” என்னும் எண்ணமே மற்ற எல்லா எண்ணங்களுக்கும் மூலகாரணம் என உணர்ந்து அதன் மரணத்தை (தன்னில்) விளக்கும் முறையில் ஓர் எளிய சமாதியினை அதற்கு எழுப்பினார்.
ஒரு பிரஹ்ம ஞானிக்கு எல்லா உயிர்களும் சமமாக, பரம்பொருளின் ஆவிர்பாவமாகவே தோன்றும்; அது மனிதரானாலும், மிருகமானாலும், பக்ஷியானாலும் சரி, எல்லாமே அவர் நோக்கில் சமமே எனக் கண்டோம். இது ஸ்ரீரமணர் விஷயத்தில் பிரத்யக்ஷமாக உணரப்பட்டது. அவரிடம் மிருகங்களும், பக்ஷிகளும் நெருங்கிப் பழகின. மலைக் குகைகளில் அவர் வசித்தபோது பாம்புகளும், தேள்களும் கூட அவர் மீது ஊறும். அவருக்கு எந்த விதமான பாதிப்போ பயமோ இருந்ததில்லை. ரமணாஸ்ரமத்திலும் லக்ஷ்மி பசுவைத் தவிர எண்ணற்ற அணில்கள், குருவிகள், மயில்கள், நாய்கள் மற்றும் குரங்குகள் கூட மஹரிஷியின் கூட வசித்தன. அவற்றில் ஏதேனும் இறந்தால் அவற்றுக்கு ஆஸ்ரமத்தில் ஒரு சமாதி எழுப்பப்படும். ஒரு சமயம் பெங்களூரிலிருந்து ஒரு பக்தரால் இரண்டு புறாக்கள் கொண்டுவரப்பட்டு மஹரிஷிக்கு அளிக்கப்பட்டன. இவற்றை ஆஸ்ரமத்திலிருந்த பூனை, குரங்கு முதலியவற்றினிடமிருந்து காப்பாற்றுவது கடினம் என அவற்றை ஏற்றுக் கொள்ளபகவான் தயங்கினார். ஆனால் அவை பகவானின் மடியை விட்டு அகல மறுத்துவிட்டன. அவற்றுக்கான கூண்டைக் கொண்டுவர அரைமணியானபோதும் அவையும் யோகிகளைப் போல அசைவின்றி அவருடன் சமாதியில் ஆழ்ந்து விட்டன.
பகவான் பள்ளிக்கூடத்தைக் கூடத் தாண்டாதபோதிலும் அவரால் பல மொழிகள் சரளமாக பேசமுடிந்தது. பல மத நூல்களிலிருந்தும் எளிதாக எடுத்துக்காட்டுகளுடன் உபதேசிக்கவும் முடிந்தது. அலகாபாத் பல்கலை நிலையத்திலிருந்து வந்த முனைவர் எம்.ஹபீஸ் சயீது பகவானின் தரிசனமும் பேச்சும் தன் மதத்தை இந்த விஞ்ஞான யுகத்தின் பார்வையிலும், மனோதத்வரீதியிலும் கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது எனக் கூறினார். அத்வைத சித்தாந்தத்திலும், புத்த மத போதனைகளைப் பற்றிய விஷயத்திலும் பல நூல்களை எழுதிய வாய்-வு-வாய் என்பவர் மஹரிஷியை பழைமையும் புதுமையும் சந்திக்கும் இடமென வர்ணிக்கிறார். ஆர்தர் ஆஸ்போர்ன் என்பவர், ஏற்கெனவே ரமணாஸ்ரமத்தில் வந்து தங்கியிருந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளின் அடிபற்றி 1945ஆம் ஆண்டு திருவண்ணாமலைக்கு வந்து ஆஸ்ரமத்தில் தங்கி, ‘மவுண்டன் பாத்’ என்னும் இதழைத் தொடங்கி 1970இல் தன் இறுதி மூச்சுவரை அந்தப் பத்திரிகையின் பொறுப்பை வகித்தார்.

எல்லா நல்ல விஷயங்களும் ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு முடிவுக்கு வரவேண்டுமல்லவா? அவதார புருஷர்களும் தங்களின் மனித உருவினைத் துறந்து என்றாவது ஒரு நாள் பெருவெளியில் கலக்கச் சித்தம் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் மறைவதில்லை. பக்தர்களின் மனக்கோவிலில் என்றென்றும் வாழ்ந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுருவை விடும்போது கூட வெள்ளரிப் பழ மோக்ஷமே. உடலைப்பிரியும் வலிகூட உணராது வருந்தாது, மஹாமிருத்யுஞ்சய மந்திரம் கூறுவது போல இயல்பாக அடைகிறார்கள். ஸ்ரீரமண மஹரிஷியின் முடிவும் அவ்வாறே நிகழ்ந்தது.
1949இல் மஹரிஷிக்கு இடக்கையில் பிளவைக் கட்டி தோன்றியது. ஆனால் உடலினின்றும் தன் ஆன்மாவை வேறாக உணர்ந்த அவருக்கு அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பக்தர்கள்தாம் துடித்து விட்டனர். அவர்களின் பிரார்த்தனைக் கிணங்கி வைத்தியர்களை தன்னைப் பரிசோதிக்க அனுமதித்த அவர், அவர்கள் அதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென வற்புறுத்தியபோது, புன்னகையுடன் தியான மண்டபத்திற்கு மறுபுறம் இருந்த அறையில் அவர்களை இருக்கச் செய்து இடையில் இருந்த சிறு பிரிவு வழியாக தன் இடக் கையினை நீட்டி அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு கூறினார். பகவானை அவருடைய பக்தர்களுக்கு அளிக்கும் தரிசனத்தையோ, அவர்களுடன் அவர் அளவளாவுவதையோ சிகிச்சை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து 1950ஆம் ஆண்டு ஏப்ரல் பதினான்காம் தேதி திரு.எம்.கார்டியர் பிராஸன் என்னும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், ஆஸ்ரமத்தில் தன் குடிலின் வாயிலில் நின்று கொண்டிருந்தவர் ஒரு பிரகாசமான வால் நக்ஷத்திரம் தெற்கு திசையினிறும் தோன்றி மெதுவாக வடக்கு நோக்கி நகர்வதைக் கண்டார். அருணாசல உச்சியில் அது மறைந்தது. அவரது கைக்கடிகாரம் இரவு எட்டு மணி நாற்பத்தேழு நிமிடம் காட்டியது. இந்த வால் நக்ஷத்திரம் ஸ்ரீரமண மஹரிஷி சித்தியடைந்ததை உலகுக்கு உணர்த்தியது. பலரும் இதைக் கண்டு திருவண்ணாமலைக்கு விரைந்தனர்.
பகவான் ஸ்ரீரமண மஹரிஷியே கூறியது போல “உண்மையான குரு எங்கும் நிறைந்தவர். அவர் ஆத்மஞான உருவானவர். அவர் எங்கும் போய்விட முடியாது. பிறப்பும், இறப்பும் உடலுக்கு மாத்திரமே. ஆன்மா அழிவற்றது. அதுவே எங்கும் நிறைந்த “நான்”. நான் எங்கே போக முடியும்? நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன். இந்த அவருடைய வார்த்தைகளை மனமார நம்பி அவரை தங்களின் உள்ளக்கோவிலில் தெய்வமாய் இருத்தி வணங்கும் பக்தர்களைப் பொறுத்தவரை அவர் என்றென்றும் வாழ்கிறார். வாழ்ந்து கொண்டேதான் இருப்பார். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவர்களுக்கு விஜயம் செய்ய திதி ஒன்று உண்டு. மனமென்னும் கோவிலில் அதிதியாக வந்துறையும் ஸ்ரீரமணருக்கு திதி ஏது? என்றென்றும், மனமார பக்தர்கள் வேண்டும் போதெல்லாம் அவர் விஜயம் செய்து அனுக்கிரஹம் செய்து கொண்டே இருப்பார். அவரை வணங்கி வாழ்வோம். வாருங்கள்.

No comments:

Post a Comment