என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Thursday, 23 January 2014

அந்தகன் முன்னே ஆடற்கலை..........

 

எப்போதும் யாவர்க்கும் திறந்து இருக்கும் ரமணாஸ்ரமத்தி்ற்கு ஒரு அன்பர் விஜயம் செய்தார். மகரிஷியின் சமீபமாக அமர்ந்து கொண்டு கேள்வி கேட்கத் தொடங்கினார்.
“பகவான்! ஜனனக் கட்டுப்பாடு (birth control) பற்றிய தங்கள் கருத்து என்ன ?”
பதிலேதும் வராமல் போகவே கேள்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். பின்னரும் ஏதும் பதில் வரவில்லை. ஒரு வேளை தான் சரியாகச் சொல்லவில்லையோ என்று மேலும் சிறிது நேரம் பேசி விட்டு ஓய்ந்து போனார். அந்த அறையில் மீண்டும் அமைதி நிலவியது.

இப்போது ரமணரின் குரலில் ஒரு கேள்வி தெளிவாக எழுந்தது.

”உமக்கு மரணக் கட்டுப்பாடு ( death control) பற்றித் தெரியுமா ?”
[இரமணருடைய எதிர் கேள்வி ஆழமானது. மரணத்தை ஒழித்தால் பிறப்பும் கூட ஒழிந்து விடுமன்றோ !‘கருப்படுத்தி என்னை எமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?

‘என்னை ஒரு கருப்பைக்குள் வைத்து பிறப்பு தந்து பின்னர் எமன் பிடித்துச் செல்லும் முன் நின் வடிவாய் உருசெய்து பிறப்பு இறப்பற்ற வீட்டுலகை பெற திருவருள் வருவது எப்போதோ’ என்று ஜனன மரணத்தை ஒழிக்கும் வகை வேண்டுகிறது பத்திரகிரியாரின் அருட்புலம்பல்]

மரணத்தை வெல்வது தானே ஆன்மீகத்தின் நோக்கம். இப்படி தனக்குள்ள பிரச்சனையை சிந்திப்பதை விட்டு உலகத்தைத் திருத்தும் கவலைகள் அர்த்தமற்றவை என்பதை பகவான் குறிப்பால் உணர்த்தினார்.
அன்பரிடமிருந்து பதில் வரவில்லை.
இப்படி யாரிடம் என்ன கேள்வி கேட்பது என்று புரியாமல் பல சமயங்களில் தடுமாற்றம் மனிதர்களுக்கு ஏற்படுவது உண்டு. அப்போது தம்முடைய கேள்விகளாலேயே தம் அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள்.

தாம் அறிந்து வைத்திருக்கும் விஷய ஞானத்தின் மேல் உள்ள அபார பற்றுதலும் பெருமையுமே இதற்கு முக்கிய காரணம்

Monday, 20 January 2014

அகங்காரம் இருக்கும் வரை முக்தி இல்லை

பாலும் நீரும் கலந்தது போன்றது உலகம். நீங்கள் ஓர் அன்னம் போன்று இருந்து, நீரைத் தவிர்த்து பாலைப் பருகுங்கள். ஏகாந்தத்திலே (தனிமை) இருந்து நீங்கள் தியானம் புரியும்போது உங்கள் குடும்பத்தவரிடமிருந்து உங்களை முற்றிலும் பிரித்துக் கொண்டு தனித்திருங்கள். இல்லறத்தாருக்கு ஜீவர்களிடத்து அன்பு, பக்தர்களுக்குச் சேவை; கடவுளின் புனித நாம உச்சாடனம் ஆகியவை கடமைகளாகும். பணம் நமக்குப் பெற்றுத் தருவதெல்லாம் சோறும், கறியுமேயாகும். பணத்தையே உங்களுடைய உயிரும் உடலுமெனவோ, உங்களது ஒரே குறியும் நோக்கமும் எனவோ கருதாதீர்கள். அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடாது; பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்; நீங்காது.இல்லறத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்பி இருங்கள்; பின்னர் நீங்களாக எதையுமே செய்ய வேண்டியிராது. அன்னை காளி உங்கள் பொருட்டு யாவற்றையும் தாமே செய்வாள். சம்சாரமாகிய பெருங்கடலில் ஆறு முதலைகள் உள்ளன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவையே அந்த முதலைகளாம். பெண்ணாசையை ஒழித்தவன் உலகத்தையே துறந்தவன் ஆவான். அவனுக்கு இறைவன் வெகு அருகில் இருக்கிறார்.மாயை என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியவர்களிடம் ஒருவனுக்கு உண்டாகும் பாசமாகும். எல்லா உயிர்களிடமும் சமமாகப் பரவும் அன்புக்கு தயை என்று பெயர்.

Arunachala Ramana!!!



Dedication
I seek refuge at the sacred feet of my Father, the blessed Ramana, who performs the entire work of creation, preservation and destruction, while remaining wholly unattached, and who makes us aware of what is real and thus protects us, that I may set down His words fittingly.
Arunachala Ramana
In the recesses of the lotus-shaped Hearts of all, beginning with Vishnu, there shines as pure intellect (Absolute Consciousness) the Paramatman, who is the same as my Father, Arunachala Ramana. When the mind melts with love of Him, and reaches the inmost recess of the Heart wherein He dwells as the beloved, the subtle eye of pure intellect opens and He reveals Himself as Pure Consciousness.
.

Wednesday, 1 January 2014

உலகின் அதிகாரி

 பகவான் ஆன்மீக அறிவுரைகள்ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.
* 'சாந்தம்' என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.
* சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.
அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்

சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும். அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும். இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான். மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது. மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது. அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும். மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும். நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும். உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.
சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது; * ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம். சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.

தாழ்ந்து நடப்பதால் கேடில்லை

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே!
வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும். உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம். 'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும். முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை

Wednesday, 13 November 2013

கடவுளிடம் பாரபட்சம் இல்லை


இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும்
இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரிந்த போதிலும் நாம் இன்பத் தையே நாடுகிறோம். இதற்கு முடிவு தான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி, ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தை பற்றி நினைக்கிறான். துறவி கடவுளைப் பற்றி நினைக்கிறான். ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
-ரமணர்
"உன்னை முதலில் திருத்திக் கொள் "
ஒரு மனிதன் தன் மனம், மொழி, மெய்களால் தம்மால் இயன்ற நன்மைகளைத் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் செய்ய கடமைப் பட்டவனாக இருக்கிறான். தனக்கு நன்மை செய்வதோடு பிறருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். மரணத்திற்கும், மறுபிறவிக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் தெளிந்த ஞானம் உள்ள ஒருவன் இதனால் எந்த மாற்றமும் பெறுவதில்லை. முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். மனிதன் சமயநம்பிக்கை கொண்டவனாக இருத்தல் அவசியம். சமயநம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வில் ஒழுக்கத்தை இழந்து விடுவான். மனிதன் நல்லவனாக வாழ சமயமே வழிவகை செய்கிறது. அமைதியான தூய நிலையில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகும். கலங்கிய மனத்தால் ஆசை வயப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் தீமை தருவதாகும். இறைவனின் கட்டளையன்றி எதுவுமே நடப்பதில்லை. இந்த வாழ்வில் ஒருவனுடைய நடத்தைகள் அனைத்துமே அவனுடைய முற்பிறப்பின் வினைப்பயன்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

"அளவான விரதம் போதும்"
சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது நல்லது. மிளகாய், அதிகஉப்பு, வெங்காயம் போன்ற உணவுவகைகள் ஜீரண கருவிகளை எரிச்சல்படுத்துகின்றன. மூளையை மந்தமாக்குகின்றன. கீழான உணர்வுகளை உண்டுபண்ணுகின்றன. தூக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
* தேவையான அளவை விட சற்று குறைவாக உண்பது எப்போதும் நல்லது. ரொட்டி, பழம், காய்கறிகள், பால் போன்ற சாத்வீக உணவுவகைகள் நம் எண்ணங்களை சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவ்வுணவால் உடல் வலிமை குறைந்து விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. அசைவத்தை விட வேண்டும். உள்ளத்தின் பக்குவநிலைக்கேற்ப உணவு வகைகளை மாற்ற வேண்டும்.
* உள்ளமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைகளே. அதனால், உள்ளம் சாத்வீக எண்ணங்களை நாட வேண்டும் என்று எண்ணினால் உணவிலும் சாத்வீகத்தை கைகொள்வது மிகவும் அவசியம். விரதம், பட்டினி போன்றவைகளால் உணவின் மீது கொள்கின்ற பற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். ஆனால், பட்டினி என்பது மட்டுமே ஆன்மிக சாதனம் ஆகாது. உடல் வலிமை குன்றும்படியாக விரதம் மேற்கொள்ளக்கூடாது. அளவான விரதம், மிதமான உணவோடு, அமைதியான சிந்தனை இருந்தாலே ஆன்மிகம் கைகூடி விடும்.
-ரமணர்

 

Thursday, 24 October 2013

புலம்புவதால் பயனில்லை!!!

* உள்ளபடி உள்ள இடத்தில் உள்ளவாறு உணர்ந்து அடங்கி இருப்பதே உண்மையான சித்தியாகும். மற்ற சித்திநிலைகள் எல்லாம் வெறும் கனவேயாகும்.
* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம்.
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.
-ரமணர்
"மவுனமே பூரண ஞானம்
"
ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.
ரமணர்

Wednesday, 2 October 2013

பகவான் ரமணர்......

 
அவன் ஒரு சிறுவன். அவனது பெயரும் வேங்கடராமன் தான். பகவானின் பரம பக்தையான அவனது பாட்டி எச்சம்மாள் வைத்த பெயர் அது. ஒரு வயதிலேயே தாயை இழந்த அவனை எச்சம்மாதான் வளர்த்தாள். சிறுவயதிலேயே ஆச்ரமச் சூழலில் வளர்ந்தான் அவன். தினந்தோறும் காலையும், மாலையும் ஆச்ரமம் வந்து சேவித்துச் செல்வாள் பாட்டி. உடன் சிறுவனையும் அழைத்து வருவாள்.
அவனுக்கு 10 வயது நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் கார்த்தீகை தீப தினம். அன்று ரமணரின் அனுமதியும் ஆசியும் பெற்று அண்ணாமலையார் ஆலயத்திற்குச் சென்றான். அன்று அவனது தாத்தாவின் திதி தினம் வேறு. அதனால் சிவகங்கைக் குளத்தில் முழுகிக் குளித்து பின்னர் ஈசனைத் தரிசிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவன், குளத்திற்குக் குளிக்கச் சென்றான். குளக்கரையில் யாருமில்லை. பாசி படர்ந்த அந்தக் குளத்தில் மிக ஜாக்கிரதையாகக் கால் வைத்து இறங்கினான். இரண்டு படிகள் இறங்கி இருப்பான். அப்படியே பாசியில் கால் வழுக்கி விழுந்தான். நீரில் மூழ்க ஆரம்பித்தான். நீச்சலும் தெரியாது என்பதால் பயத்தால் அலறினான். கதறினான். யாரையாவது துணைக்கு வருமாறு கத்தினான். ஆனால் மூழ்கிக் கொண்டிருந்த அவன் குரல் யார் காதிலும் கேட்கவேயில்லை.
உடல் கீழே செல்ல ஆரம்பித்தது. சிறுவன் போராடி மேலே வர முயற்சி செய்தான். இயலவில்லை. எங்கும் கருமை சூழ்ந்தது. அப்போது ’திடீர்’ என்று தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதில் பகவான் ரமணரின் அருள் பொங்கும் முகம் தெரிந்தது. உடனே அந்த உருவம் மறைந்தது. அவ்வளவுதான். தண்ணீரை அதிகம் குடித்த அந்தச் சிறுவன் மெள்ள மெள்ள மயங்க ஆரம்பித்தான். யாரோ அவனது காலைப் பிடிப்பது போலிருந்தது. ஒளி தோன்றி மீண்டும் அதில் பகவான் ரமணரின் முகம் தெரிந்தது. அந்தப் பையன் மூர்ச்சையாகிப் போனான்.
அவனுக்கு நினைவு திரும்பியபோது சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டில் படுத்திருந்தான். உடலிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கிப் போன தான் எப்படி மீண்டு வந்தோம் என்பது தெரியாமல் திகைத்தான். தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களிடம் தன்னைக் காப்பாற்றியது யார் என்று கேட்டான்.
அங்கிருந்த ஒருவர், “கம்பத்து இளையனாரைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென குளத்துப் பக்கம் ஓடினார். அப்படியே தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் உன்னைக் கரையேற்றி இங்கே கிடத்தி விட்டு கோயிலுக்குள் வேகமாகப் போய் விட்டார். அவர் யார் என்பது தெரியவில்லை” என்றார்.
சிறுவன் ஆலயத்திற்குள் சென்றான். தன்னைக் காப்பாற்றியவர் அடையாளம் காண்கிறாரா, அவரிடம் நன்றி சொல்லலாம் என்று தேடிப் பார்த்தான். யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலையாரைத் தரிசித்தான். பின்னர் வீட்டுக்குச் சென்றான். சொன்னால் திட்டுவார்கள் என்பதால் தனக்கு நேர்ந்த விஷயத்தை வீட்டில் அவன் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பாட்டி எச்சம்மாளுடன் ரமணாச்ரமம் சென்றான்.
இருவரும் பகவானை தரிசித்தனர். அப்போது பகவான் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனை நோக்கி “ ஆமாம். சிவகங்கைக் குளம் எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்று கேட்டார்.
பகவான் அப்படிக் கேட்டதும் அந்தச் சிறுவன் திகைத்துப் போனான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. (அந்த வயதில் அது அவனுக்குப் புரியவில்லை) பயந்து போய் அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விட்டான்.
பிற்காலத்தில் கே.வி.மாமா என்று பிற பக்தர்களால் அழைக்கப்பட்ட கே.வேங்கடராமனுக்கு, வளர்ந்து இளைஞனான பின் தான் அந்தச் சொல்லின் பொருள் புரிந்தது. தன்னைக் காப்பாற்றியது முக்காலமும் உணர்ந்த பகவானன்றி வேறு யாராக இருக்கும் என்று உணர்ந்தவர், அவரைப் போற்றி வணங்கினார்.
“சித்திகள் சாதனைக்குத் தடை” என்று கூறியவர் பகவான் ரமணர். சாதகர்கள் சித்திகளிலேயே மனம் லயித்து வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு கூறினாரே தவிர, சித்திகளை இழித்துரைப்பதற்காக அல்ல. என்றாலும் பக்தர்களைக் காப்பதற்காக அவர் சித்தி பற்றிய தனது விதியை பலவிதங்களில் தளர்த்திக் கொண்டார் என்றே சொல்லலாம். பலருக்கு பல ரூபங்களில் அருணாசல ரமணர் அருள் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றை அவர் எப்போதும் வெளிச் சொன்னதில்லை. பக்தர்கள் அதுபற்றி ஏதாவது பேசினாலும் கூட ‘ஓஹோ, அப்படியா’ என்பது போல கேட்டுக் கொண்டிருப்பாரே தவிர, அவற்றைச் செய்தது தான் தான் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. சமயங்களில் ‘ஏதோ ஒரு சக்தி அப்படிச் செய்திருக்கலாம்’ என்று சொல்லி மழுப்பி விடுவார்.
அவர் தான் ரமணர்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!