என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Thursday, 24 October 2013

புலம்புவதால் பயனில்லை!!!

* உள்ளபடி உள்ள இடத்தில் உள்ளவாறு உணர்ந்து அடங்கி இருப்பதே உண்மையான சித்தியாகும். மற்ற சித்திநிலைகள் எல்லாம் வெறும் கனவேயாகும்.
* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம்.
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.
-ரமணர்
"மவுனமே பூரண ஞானம்
"
ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.
ரமணர்

Wednesday, 2 October 2013

பகவான் ரமணர்......

 
அவன் ஒரு சிறுவன். அவனது பெயரும் வேங்கடராமன் தான். பகவானின் பரம பக்தையான அவனது பாட்டி எச்சம்மாள் வைத்த பெயர் அது. ஒரு வயதிலேயே தாயை இழந்த அவனை எச்சம்மாதான் வளர்த்தாள். சிறுவயதிலேயே ஆச்ரமச் சூழலில் வளர்ந்தான் அவன். தினந்தோறும் காலையும், மாலையும் ஆச்ரமம் வந்து சேவித்துச் செல்வாள் பாட்டி. உடன் சிறுவனையும் அழைத்து வருவாள்.
அவனுக்கு 10 வயது நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் கார்த்தீகை தீப தினம். அன்று ரமணரின் அனுமதியும் ஆசியும் பெற்று அண்ணாமலையார் ஆலயத்திற்குச் சென்றான். அன்று அவனது தாத்தாவின் திதி தினம் வேறு. அதனால் சிவகங்கைக் குளத்தில் முழுகிக் குளித்து பின்னர் ஈசனைத் தரிசிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவன், குளத்திற்குக் குளிக்கச் சென்றான். குளக்கரையில் யாருமில்லை. பாசி படர்ந்த அந்தக் குளத்தில் மிக ஜாக்கிரதையாகக் கால் வைத்து இறங்கினான். இரண்டு படிகள் இறங்கி இருப்பான். அப்படியே பாசியில் கால் வழுக்கி விழுந்தான். நீரில் மூழ்க ஆரம்பித்தான். நீச்சலும் தெரியாது என்பதால் பயத்தால் அலறினான். கதறினான். யாரையாவது துணைக்கு வருமாறு கத்தினான். ஆனால் மூழ்கிக் கொண்டிருந்த அவன் குரல் யார் காதிலும் கேட்கவேயில்லை.
உடல் கீழே செல்ல ஆரம்பித்தது. சிறுவன் போராடி மேலே வர முயற்சி செய்தான். இயலவில்லை. எங்கும் கருமை சூழ்ந்தது. அப்போது ’திடீர்’ என்று தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதில் பகவான் ரமணரின் அருள் பொங்கும் முகம் தெரிந்தது. உடனே அந்த உருவம் மறைந்தது. அவ்வளவுதான். தண்ணீரை அதிகம் குடித்த அந்தச் சிறுவன் மெள்ள மெள்ள மயங்க ஆரம்பித்தான். யாரோ அவனது காலைப் பிடிப்பது போலிருந்தது. ஒளி தோன்றி மீண்டும் அதில் பகவான் ரமணரின் முகம் தெரிந்தது. அந்தப் பையன் மூர்ச்சையாகிப் போனான்.
அவனுக்கு நினைவு திரும்பியபோது சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டில் படுத்திருந்தான். உடலிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கிப் போன தான் எப்படி மீண்டு வந்தோம் என்பது தெரியாமல் திகைத்தான். தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களிடம் தன்னைக் காப்பாற்றியது யார் என்று கேட்டான்.
அங்கிருந்த ஒருவர், “கம்பத்து இளையனாரைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென குளத்துப் பக்கம் ஓடினார். அப்படியே தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் உன்னைக் கரையேற்றி இங்கே கிடத்தி விட்டு கோயிலுக்குள் வேகமாகப் போய் விட்டார். அவர் யார் என்பது தெரியவில்லை” என்றார்.
சிறுவன் ஆலயத்திற்குள் சென்றான். தன்னைக் காப்பாற்றியவர் அடையாளம் காண்கிறாரா, அவரிடம் நன்றி சொல்லலாம் என்று தேடிப் பார்த்தான். யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலையாரைத் தரிசித்தான். பின்னர் வீட்டுக்குச் சென்றான். சொன்னால் திட்டுவார்கள் என்பதால் தனக்கு நேர்ந்த விஷயத்தை வீட்டில் அவன் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பாட்டி எச்சம்மாளுடன் ரமணாச்ரமம் சென்றான்.
இருவரும் பகவானை தரிசித்தனர். அப்போது பகவான் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனை நோக்கி “ ஆமாம். சிவகங்கைக் குளம் எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்று கேட்டார்.
பகவான் அப்படிக் கேட்டதும் அந்தச் சிறுவன் திகைத்துப் போனான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. (அந்த வயதில் அது அவனுக்குப் புரியவில்லை) பயந்து போய் அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விட்டான்.
பிற்காலத்தில் கே.வி.மாமா என்று பிற பக்தர்களால் அழைக்கப்பட்ட கே.வேங்கடராமனுக்கு, வளர்ந்து இளைஞனான பின் தான் அந்தச் சொல்லின் பொருள் புரிந்தது. தன்னைக் காப்பாற்றியது முக்காலமும் உணர்ந்த பகவானன்றி வேறு யாராக இருக்கும் என்று உணர்ந்தவர், அவரைப் போற்றி வணங்கினார்.
“சித்திகள் சாதனைக்குத் தடை” என்று கூறியவர் பகவான் ரமணர். சாதகர்கள் சித்திகளிலேயே மனம் லயித்து வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு கூறினாரே தவிர, சித்திகளை இழித்துரைப்பதற்காக அல்ல. என்றாலும் பக்தர்களைக் காப்பதற்காக அவர் சித்தி பற்றிய தனது விதியை பலவிதங்களில் தளர்த்திக் கொண்டார் என்றே சொல்லலாம். பலருக்கு பல ரூபங்களில் அருணாசல ரமணர் அருள் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றை அவர் எப்போதும் வெளிச் சொன்னதில்லை. பக்தர்கள் அதுபற்றி ஏதாவது பேசினாலும் கூட ‘ஓஹோ, அப்படியா’ என்பது போல கேட்டுக் கொண்டிருப்பாரே தவிர, அவற்றைச் செய்தது தான் தான் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. சமயங்களில் ‘ஏதோ ஒரு சக்தி அப்படிச் செய்திருக்கலாம்’ என்று சொல்லி மழுப்பி விடுவார்.
அவர் தான் ரமணர்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

”மகாத்மாவும் மகா ஆத்மாவும்”

பகவான் ரமணர், மகாத்மா காந்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காந்தி திருவண்ணாமலை வந்திருந்தபோது ரமண மஹர்ஷியை தரிசிக்க எண்ணியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது. மூன்று முறை காந்தி ரமணரை தரிசிக்க முயற்சி செய்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
1948ல் மகாத்மா மறைந்தார் என்ற செய்தி நாடு முழுதும் துக்கத்தை ஏற்படுத்தியது. வானொலிகளில் தொடர்ந்து பஜனை, பிரார்த்தனைப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதைக் கேட்ட பகவான், “ தன் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்தவருக்கு மக்களுடைய பிரார்த்தனை இது” என்றார் தழுதழுத்த குரலில்.
பகவான் காலை நடைக்காக வெளியே செல்லும் போது ஒரு பத்திரிகை நிருபர், காந்திஜியின் மறைவு பற்றி பகவானின் கருத்தைக் கேட்டார். அதற்கு பகவான் மிகவும் உணர்ச்சி மிக்க குரலில், “மகாத்மா காந்தியின் மறைவுக்காக ஒவ்வொரு மனிதனின் இதயமும் துக்கப்படுகிறது. துக்கப்படாமல் யார் இருக்கிறார்கள், யாரால் இருக்க முடியும்?” என்றார்.
அவர் உலா முடித்து திரும்பி வரும்போது, காந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ” பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பகவானின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மாலை 5 மணிக்கு ஆச்ரமத்தில் காந்திஜிக்காக சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது. பகவானும் அதில் கலந்து கொண்டார்.
மறுநாள் காந்தியின் மரணம் பற்றி பக்தர் ஒருவரிடம் “ ம்ம். சுயராஜ்யம் கிடைத்து விட்டது. நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. ஏன் இன்னும் இருக்கிறீர்கள்? போக வேண்டாமா? ஏற்கனவே தாமதமாகி விட்டது என்பது போல காந்தி அனுப்பப்பட்டு விட்டார்” என்றார் சோகத்துடன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!


அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம்

.ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே அடியவர் ஒருவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்

லட்சுமி என்கிற பசு....

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும் போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்து விட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம் மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.
தம்மை அடைந்த பசுவையும் முக்தியடையச் செய்யும் பெருங்கருணை படைத்த ரமணரின் மடியில் உயிரைவிடும் பாக்கியம் அப் பசுவுக்குக் கிடைத்தது.
“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக் கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார். இன்றும்கூட லட்சுமியில் சமாதியில் பகவான் ரமணர் அதன் மீது பாடிய இரங்கற்பாவை நாம் காணலாம்.

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.
அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசி தானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்து விட்டது. விரிசல் விட்டது.  பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.
ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”
“இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”
“இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.
மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.
குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !
பகவானுக்குப் பரம சந்தோஷம். பரம திருப்தி.
சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.
தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார். அந்தக் குருவிக் குஞ்சு செய்த புண்ணியம் தான் எத்தகையது?  பறவைக் குலத்துக்கும் கருணை காட்டிய முனிவரின் அன்பை எண்ணி வியந்தனர் அன்பர்கள்.