இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும்
இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரிந்த போதிலும் நாம் இன்பத் தையே நாடுகிறோம். இதற்கு முடிவு தான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி, ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தை பற்றி நினைக்கிறான். துறவி கடவுளைப் பற்றி நினைக்கிறான். ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும்
கடவுளிடம் பாரபட்சம் இல்லை
இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
உன்னை முதலில் திருத்திக் கொள்
ஒரு மனிதன் தன் மனம், மொழி, மெய்களால் தம்மால் இயன்ற நன்மைகளைத் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் செய்ய கடமைப் பட்டவனாக இருக்கிறான். தனக்கு நன்மை செய்வதோடு பிறருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். மரணத்திற்கும், மறுபிறவிக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் தெளிந்த ஞானம் உள்ள ஒருவன் இதனால் எந்த மாற்றமும் பெறுவதில்லை. முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். மனிதன் சமயநம்பிக்கை கொண்டவனாக இருத்தல் அவசியம். சமயநம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வில் ஒழுக்கத்தை இழந்து விடுவான். மனிதன் நல்லவனாக வாழ சமயமே வழிவகை செய்கிறது. அமைதியான தூய நிலையில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகும். கலங்கிய மனத்தால் ஆசை வயப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் தீமை தருவதாகும். இறைவனின் கட்டளையன்றி எதுவுமே நடப்பதில்லை. இந்த வாழ்வில் ஒருவனுடைய நடத்தைகள் அனைத்துமே அவனுடைய முற்பிறப்பின் வினைப்பயன்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.
அளவான விரதம் போதும்
* சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது நல்லது. மிளகாய், அதிகஉப்பு, வெங்காயம் போன்ற உணவுவகைகள் ஜீரண கருவிகளை எரிச்சல்படுத்துகின்றன. மூளையை மந்தமாக்குகின்றன. கீழான உணர்வுகளை உண்டுபண்ணுகின்றன. தூக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
* தேவையான அளவை விட சற்று குறைவாக உண்பது எப்போதும் நல்லது. ரொட்டி, பழம், காய்கறிகள், பால் போன்ற சாத்வீக உணவுவகைகள் நம் எண்ணங்களை சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவ்வுணவால் உடல் வலிமை குறைந்து விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. அசைவத்தை விட வேண்டும். உள்ளத்தின் பக்குவநிலைக்கேற்ப உணவுவகைகளை மாற்ற வேண்டும்.
* உள்ளமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைகளே. அதனால், உள்ளம் சாத்வீக எண்ணங்களை நாட வேண்டும் என்று எண்ணினால் உணவிலும் சாத்வீகத்தை கைகொள்வது மிகவும் அவசியம். விரதம், பட்டினி போன்றவைகளால் உணவின் மீது கொள்கின்ற பற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். ஆனால், பட்டினி என்பது மட்டுமே ஆன்மிக சாதனம் ஆகாது. உடல் வலிமை குன்றும்படியாக விரதம் மேற்கொள்ளக்கூடாது. அளவான விரதம், மிதமான உணவோடு, அமைதியான சிந்தனை இருந்தாலே ஆன்மிகம் கைகூடி விடும்.
-ரமணர்
இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம்
* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம்.
-ரமணர்
* உள்ளபடி உள்ள இடத்தில் உள்ளவாறு உணர்ந்து அடங்கி இருப்பதே உண்மையான சித்தியாகும். மற்ற சித்திநிலைகள் எல்லாம் வெறும் கனவேயாகும்.
* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம்.
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.
-ரமணர்
மவுனமே பூரண ஞானம்
ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.