
சாந்தமுள்ளவனே தைரியசாலி
சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது; * ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம். சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.
தாழ்ந்து நடப்பதால் கேடில்லை
நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும். உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம். 'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும். முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.
எல்லாம் கடவுள் செயல்
அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்.